இஸ்ரேல் புதிய பிரதமராக நாஃப்டாலி பென்னட்(49) சமீபத்தில் பதவியேற்றார். இதன்மூலம் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.

இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்தன. அந்தக் கூட்டணி அமைத்துள்ள புதிய அரசுக்கு நாடாளுமன்ற அங்கீகாரம் அளிப்பதற்கான வாக்கெடுப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் வலதுசாரி யாமினா கட்சியின் தலைவரான நாஃப்டாலி பென்னட் தலைமையிலான புதிய அரசு வெற்றி பெற்றது. 120 உறுப்பினர்களைக் கெண்ட நாடாளுமன்றத்தில் புதிய அரசுக்கு ஆதரவாக 60 வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும் கிடைத்தன. ஓர் உறுப்பினர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இதையடுத்து, இஸ்ரேலின் 13-ஆவது பிரதமராக நாஃப்டாலி பென்னட் பதவியேற்றார். புதிய அரசில் 27 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 9 பேர் பெண்கள்.

பலமுனை கூட்டணி : நாஃப்டாலி பென்னட் தலைமையிலான கூட்டணியில் பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட 8 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. முதல்முறையாக ஓர் அரபுக் கட்சியும் இடம் பெற்றுள்ளது. யெஷ் அடிட் கட்சித் தலைவரான யாயிர் லபீட்டுடன் பென்னட் அதிகார பகிர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளார். அதன்படி, முதல் இரு ஆண்டுகள் பென்னட்டும், அடுத்த இரு ஆண்டுகள் லபீட்டும் பிரதமராகப் பதவி வகிப்பார்கள்.

புதிய அரசுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து, நெதன்யாகு தலைமையிலான 12 ஆண்டுகால தொடர் ஆட்சி முடிவுக்கு வந்தது. 1996 முதல் 1999 வரை பிரதமராகப் பதவி வகித்த நெதன்யாகு, 2009-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 12 ஆண்டுகளாக அப்பதவியில் இருந்து வந்தார்.