உலகின் மிகப்பெரிய பனிப்பாறை அண்டார்டிகா பனிப் பிரதேசத்திலிருந்து பிரிந்து கடலில் மிதக்கத் தொடங்கியிருப்பதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த மையம் வெளியிட்டுள்ள தகவல்படி, ’ஏ-76 என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பனிப்பாறை, புது தில்லியை விட 3 மடங்கு பெரியது என்று தெரியவந்துள்ளது. தில்லியின் பரப்பளவு 1,484 சதுர கிலோ மீட்டர்களாக உள்ள நிலையில், இந்தப் பனிப்பாறை சுமார் 4,320 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகும்.

170 கி.மீ. நீளமும், 25 கி.மீ. அகலமும் கொண்டுள்ள அந்தப் பனிப்பாறை தற்போது அண்டார்டிகா பனிப் பிரதேசத்திலிருந்து பிரிந்து அந்தப் பகுதியிலுள்ள வெடல் என்ற கடலில் மிதக்கத் தொடங்கியுள்ளது.

ஏ-76 பனிப்பாறை அண்டார்டிகா பனிப்பிரதேசத்தின் ’ரோனி என்ற பரப்பிலிருந்து பிரிந்து கடலில் மிதக்கத் தொடங்கியிருப்பதை பிரிட்டன் அண்டார்டிகா ஆய்வு மையம் கண்டறிந்ததாகவும், அதை அமெரிக்காவின் தேசிய பனிப்பிரதேச மையம் உறுதி செய்துள்ளதாகவும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரோனி உள்பட பல்வேறு பனிப் பரப்புகள் இணைந்ததே அண்டார்டிகா நிலப் பகுதியாகும்.

அண்டார்டிகாவிலிருந்து பனிப்பாறைகள் பிரிவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு பாரீஸ் நகரைவிட 1.5 மடங்கு பெரிய பனிப்பாறை அண்டார்டிகாவின் பிரன்ட் பனிப் பரப்பிலிருந்து பிரிந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல 2017-ஆம் ஆண்டிலும் ஒரு பனிப்பாறை பிரிந்தது.

எனினும், பனிப் பாறைகள் இவ்வாறு பிரிந்து கடலில் மிதக்கத் தொடங்குவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. உலக வெப்ப மயமாதலும், பருவநில மாறுபாடுமே இவற்றுக்குக் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.