டி.என்.பி.எஸ்.சி. நடத்திய 1,338 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-2 முதல்நிலை தேர்வு முடிவு நேற்று வெளியானது. சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 228 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) 1,338 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-2 முதல்நிலை தேர்வை கடந்த மாதம் 11-ந் தேதி நடத்தியது. மொத்தம் 6 லட்சத்து 26 ஆயிரத்து 970 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், 4 லட்சத்து 62 ஆயிரத்து 697 பேர் இந்த தேர்வை எழுதினார்கள். டி.என்.பி.எஸ்.சி.யால் நடத்தப்படும் தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதன்படி, முதல்நிலை தேர்வு முடிவு 2 மாதங்களிலும், முதன்மை தேர்வு முடிவு 2 மாதங்களிலும், எழுத்து தேர்வு முடிவு 3 மாதங்களிலும் வெளியிடப்படும் என்றும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்தவகையில், குரூப்-2 முதல்நிலை தேர்வு நடந்து முடிந்த 36 நாட்களில் திருத்தும் பணியை நிறைவு செய்து, தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதனைத் தொடர்ந்து முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு (2019) பிப்ரவரி மாதம் 23-ந் தேதி (சனிக்கிழமை) நடத்தப்பட இருக்கிறது. முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்ட 15 ஆயிரத்து 194 விண்ணப்பதாரர்கள், தங்களுடைய சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக வருகிற 24-ந் தேதி முதல் ஜனவரி 10-ந் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும். தேர்வு கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள் முதன்மை தேர்வுக்கான கட்டணத்தையும் வருகிற 24-ந் தேதி முதல் ஜனவரி 10-ந் தேதி வரை www.tnpscexams.net என்ற இணையதளம் வழியே செலுத்த வேண்டும். சான்றிதழ் பதிவேற்றம் செய்யாத, விண்ணப்ப கட்டணம் செலுத்தாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அவர்கள் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 23-ந் தேதி நடைபெற இருப்பதால், அன்றைய தினம் நடைபெறுவதாக இருந்த நூலகர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வேறு ஒருநாளில் நடத்தப்படும். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். மேற்கண்ட தகவல் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.