இந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள் | இந்திய ரெயில்வே துறையின் பல்வேறு மண்டலங்களிலும் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் இந்திய ரெயில்வே. தற்போது ரெயில்வே துறையின் பல்வேறு மண்டலங்களில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தென்கிழக்கு ரெயில்வே மண்டலத்தில் 1785 பேரும், தென்கிழக்கு மத்திய மண்டலத்தில் 1050 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது தவிர மத்திய மண்டலத்தில் அப்ரண்டிஸ் அல்லாத அலுவலக பணிகளுக்கும் 275 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு மண்டலத்தில் விளையாட்டு ஒதுக்கீட்டின்படி 20 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இவை பற்றிய விவரங்களை அறிவோம்… தென்கிழக்கு மண்டலத்தில் உள்ள 1785 பணியிடங்களில் காரக்பூர் பணிமனைக்கு 360 பேரும், கேரேஜ் பிரிவில் 121 பேரும், என்ஜினீயரிங் ஒர்க்‌ஷாப் பிரிவில் 100 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். சிக்னல் டெலிகாம் ஒர்க்‌ஷாப், டிராக் மெஷின், டீசல் லோகோ ஷெட், எலக்ட்ரிக் லோகோ ஷெட், கேரேஜ் வேகன் டெப்போ, டி.இ.இ., எஸ்.எஸ்.இ. போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு 1-1-2018 தேதியில் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படு கிறது. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன், ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி, இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். 2-1-2018-ந் தேதி வரை இதற்கான விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். இது பற்றிய விவரங்களை www.ser.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். தென்கிழக்கு மத்திய மண்டலத்தில் பிலாஸ்பூர் பிராந்தியத்தில் 432 பேரும், நாக்பூர் பிராந்தியத்தில் 313 பேரும், ராய்ப்பூர் பகுதியில் 305 பேரும் பயிற்சிப் பணிக்கு சேர்க்கப்படுகிறார்கள். மெக்கானிக், ஸ்டெனோகிராபர், எலக்ட்ரீசியன், வயர்மேன், ஷீட் மெட்டல் ஒர்க்கர், வெல்டர், பிளம்பர், மாசன், பெயிண்டர், கார்பெண்டர், பிட்டர், மெஷினிஸ்ட், டர்னர், சர்வேயர் உள்ளிட்ட பிரிவில் பணியிடங்கள் உள்ளன. 10,12-ம் வகுப்பு படித்து, பணியிடங்கள் சார்ந்த பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 24 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் www.secr.indianrailways.gov.in என்ற இணையதளம் வழியாக விரிவான விவரங்களைப் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 27-12-2017-ந் தேதியாகும். அப்ரண்டிஸ் பயிற்சி அல்லாமல் மும்பையை தலைமை இடமாக கொண்ட மத்திய ரெயில்வே மண்டலத்தில் அலுவலக பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. ஜூனியர் கிளார்க், டைப்பிஸ்ட் பணிக்கு 150 பேரும், கூட்ஸ் கார்டு பணிக்கு 125 பேரும், தேர்வு செய்யப்படுகிறார்கள். ஜூனியர் கிளார்க் மற்றும் டைப்பிஸ்ட் பணியிடங்களுக்கு 42 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் பிளஸ்-2 படித்திருப்பதுடன், குறிப்பிட்ட வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணினி அடிப்படையிலான தேர்வு, தட்டச்சு திறன் சோதனை, சான்றிதழ் சரிபார்த்தல், மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு 30-12-2017-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இதேபோல் கூட்ஸ் கார்டு பணிக்கு பட்டப்படிப்பு படித்த, 42 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. இவர்கள் www.rrccr.com என்ற இணையதளத்தில் முழுமையான விவரங்களைப் பார்த்துவிட்டு 30-12-2017-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதேபோல தெற்கு ரெயில்வேயில் விளையாட்டு ஒதுக்கீட்டின் அடிப்படையில் 20 பேருக்கு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. பிளஸ்-2 மற்றும் பட்டப்படிப்பு படித்து, விளையாட்டில் சாதித்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ரெயில்வே பணியைப் பெறலாம். இது பற்றிய விவரங்களை www.rrcmas.in என்ற இணையதள பக்கத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 18-12-2017-ந் தேதி கடைசி நாளாகும்.