தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்வு முடிவு அறிவிப்புக்களுக்கான அட்டவணையினை தேர்வாணைய இணையத்தளத்தில் வெளியிட்டு வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட தேர்வுகளுள், ஆறு தேர்வுகளுக்கான முடிவுகளைத் தவிர, அனைத்து தேர்வு முடிவுகளும் அறிவிக்கப்பட்ட மாதத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வாணையத்தால், ஆண்டுதோறும், நாற்பதுக்கும் மேற்பட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றுக்காக சுமார் முப்பது லட்சம் வரையிலான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கின்றனர்.அவற்றில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்-1 (தொகுதி – 1 பணிகள்) பதவிகளுக்கான 181 காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கை 01.01.2019 அன்று வெளியிடப்பட்டது.  03.03.2019 அன்று 2,29,438 விண்ணப்பதாரர்களுக்கு முதனிலைத் தேர்வும், 12.07.2019, 13.07.2019 மற்றும் 14.07.2019 ஆகிய தேதிகளில் 9,442 விண்ணப்பதாரர்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வும் நடத்தப்பட்டன.

தற்பொழுது, தொகுதி-1 -ல் அடங்கிய பதவிகளுக்காக அறிவிக்கப்பட்ட 181 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வாணையம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து அதிக காலிப்பணியிடங்களுக்காக, அதிக விண்ணப்பதாரர்கள் எழுதிய தொகுதி 1 தேர்வு இதுவாகும். அதிகப்படியான  விடைத்தாட்கள் மதிப்பீடு செய்யப்பட்டு இத்தேர்வு முடிவுகள் மிக குறுகிய காலத்திற்குள் (அதாவது நான்கரை மாதங்களில்) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அளவில் எந்த மாநில தேர்வாணையமும் இவ்வளவு விரைவாக எழுத்துத் தேர்வு முடிவுகளை வெளியிட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அரிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வுக்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 363 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in -ல் வெளியிடப்பட்டுள்ளது.  இவர்களுக்கான மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியன 23.12.2019 முதல் 31.12.2019 வரை (25.12.2019 மற்றும் 29.12.2019 நீங்கலாக)  நடைபெறவுள்ளது.  இதற்கான குறிப்பாணை வழக்கம்போல் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டு, தெரிவாளர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

வரும் 27.12.2019 மற்றும் 30.12.2019 ஆகிய நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால் மேற்படி நாட்களில் தேர்தல் நடைபெறாத மாவட்டங்களைச் (திருநெல்வேலி, தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை) சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்படுவர். எனினும், தேர்தல் நடைபெறும் மாவட்டங்களைச் சேர்ந்த ஏதேனும் விண்ணப்பதாரர்கள் மேற்கூறிய இரு தினங்களில் நேர்காணலுக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தால் அவர்கள் முன்கூட்டியே தேர்வாணையத்தை அணுகி, நேர்காணல் தேதியினை மற்றொரு தேதிக்கு மாற்றிக்கொள்ளலாம்.இனிவருங்காலங்களிலும், இதுபோன்ற தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஒரு வருட காலத்திற்குள் வெளியிடப்படும்.தொகுதி-1-ல் அடங்கிய பதவிகளுக்கான தேர்விற்கு பின்வரும் நிலையான கால அட்டவணை பின்பற்றப்படும்.

ஜனவரி மாதம் (முதல் வாரம்) – அறிவிக்கை வெளியீடு
ஏப்ரல் மாதம்                 – முதனிலைத் தேர்வு
மே மாதம்                   – முதனிலைத் தேர்வு முடிவுகள்
ஜுலை மாதம்                – முதன்மை எழுத்துத் தேர்வு
நவம்பர் மாதம்               – முதன்மை எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியீடு
டிசம்பர் மாதம் (முதல் வாரம்) – நேர்முகத் தேர்வு
டிசம்பர் மாதம் (இறுதி வாரம்)  – கலந்தாய்வு / இறுதி முடிவுகள்

இதுதவிர, தொகுதி-2 மற்றும் தொகுதி-4 – ல் அடங்கிய பதவிகளுக்கான தேர்வுகளும் வழக்கமாக வருடந்தோறும் நடத்தப்படும். தொகுதி-1 -ல் அடங்கிய பதவிகளுக்கான தேர்விற்கான நிலையான கால அட்டவணையைப் போலவே மேற்படி தேர்வுகளுக்கும், நிலையான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும். இரா. சுதன், இ.ஆ.ப., தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்.