டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதத்தில் வெளியீடு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) அண்மையில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளின் முடிவுகள் வெளியாகும் உத்தேச காலம் தொடர்பாக அதன் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: 

 இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை செயல் அலுவலர் (கிரேடு-3) பதவியில் 55 காலியிடங்களையும் செயல் அலுவலர் (கிரேடு-4) பதவியில் 65 காலியிடங்களையும் நிரப்புவதற்காக பிப்ரவரி16 மற்றும் 17-ம் தேதி நடத்தப்பட்ட தேர்வுகள், அரசு ஐடிஐ முதல்வர், தொழில் பயிற்சி உதவி இயக்குநர், தொழில் துறை உதவி பொறியாளர் பதவிகளில் 41காலியிடங்களை நிரப்ப மார்ச் 2-ல் நடைபெற்ற தேர்வு, மாவட்டகல்வி அதிகாரி பதவியில் 20 காலியிடங்களை நிரப்புவதற்காக மார்ச் 2-ல் நடத் தப்பட்ட தேர்வு ஆகிய 4 போட்டித் தேர்வுகளின் முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும்.

இவ்வாறு அறிவிப்பில் கூறப் பட்டுள்ளது. உத்தேச தேர்வு முடிவு அட்டவணையில் மார்ச் 3-ல் நடைபெற்ற குரூப்-1 முதல்நிலைத் தேர்வின் முடிவும், அதேபோல், நகர் மற்றும் ஊரமைப்பு இயக்ககத்தில் வரைவாளர் (கிரேடு-3)பதவிக்கு பிப்ரவரி 3-ல் நடத்தப்பட்ட தேர்வின் முடிவும் மார்ச் மாதத்தில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த இரு தேர்வுகளின் முடிவுகளும் ஓரிரு நாளில் வெளியாக வாய்ப்புள்ளது.