தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அரசு உதவி வழக்கறிஞர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 46 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பி.எல். சட்டப்படிப்பு படித்து, பார் கவுன்சிலில் பதிவு செய்து வைத்திருப்பவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 34 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பெறும் பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்ப பதிவு கட்டணமாக ரூ.150, முதல்நிலை தேர்வுக்கட்டணமாக ரூ.100, முதன்மைத் தேர்வு கட்டணமாக ரூ.200 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்டவர்களுக்கு கட்டணத்தில் விதிவிலக்கு உண்டு. விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 31-10-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். முதல்நிலைத் தேர்வு 5-1-2019 அன்றும், முதன்மைத் தேர்வு அடுத்த ஆண்டு மே மாதமும் நடைபெறுகிறது. இது பற்றிய விவரங்களை www.tnpsc.gov.inஎன்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.