தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது | அரசு ஊழியர்களின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் தொடர்பாக விவாதிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று காலை நடக்கிறது. அமைச்சரவை மாற்றத்துக்குப் பிறகு நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும். இக்கூட்டத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் குறித்து அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவின் அறிக்கை குறித்து விவாதிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ஊதிய உயர்வு அளிப்பது குறித்து அமைச்சரவையில் இறுதி செய்யப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்படும் என தெரிகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 7-வது சம்பள உயர்வு தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் வழங்கும் வகையில் ஊதியக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதன் தலைவரான சண்முகம் கடந்த மாதம் 27-ந்தேதி ஊதியக்குழு பரிந்துரைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார். குழுவின் பரிந்துரைகளை அரசாணைகளாக வெளியிடும் பணிகள் நிதித்துறையில் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. பரிந்துரைகளை ஏற்பது தொடர்பான கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று நடக்கிறது. முதல்-அமைச்சருடன் நடைபெறும் இந்த கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள், நிதித்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு ஊதிய உயர்வு அளிப்பது குறித்து விளக்கி கூறுகிறார்கள். அதனை தொடர்ந்து நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் 7-வது ஊழியக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் அதற்கான அரசாணை இன்றே வெளியாக வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு 20 முதல் 25 சதவீதம் அளவில் சம்பள உயர்வு இருக்கும் என்று தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் 1-7-2017 முதல் நிலுவை தொகையை வழங்க முடிவு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.